உச்சத்தில் மின் தேவை.. சூப்பர் திட்டத்தை கையில் எடுக்கும் தமிழக அரசு.. அமைச்சர் கே.என். நேரு தகவல்
கோவை: கோவையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.என். நேரு மின்சார உற்பத்தி குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ 5.59 கோடி மதிப்பில் நிறைவடைந்த 9 பணிகள் மற்றும் 49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விக்னேஷ் லாக் அப் மரணம்... 5 காவலர்களை உடனே சஸ்பென்ட் பண்ணுங்க - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கோவையின் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும் தற்பொழுது 96 மாநகர மன்ற உறுப்பினர்களும் 7 நகராட்சிகளும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் சிறுவாணி நீர் குறித்து கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவையில் தண்ணீர் பஞ்சம் இல்லாத படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவையில் 591.44 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்" என்று பேசினார்.
முக்கிய திட்டங்கள்
இந்த நிகழ்வில் 10க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "மாநகராட்சிகளைப் பொருத்தவரை ரூ 24 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 591 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் பில்லூர் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக நடைபெறுவதாகச் சிலர் கூறிய நிலையில் அதனைப் பார்வையிட்டு விரைந்து முடிக்கும் படி அறிவுறுத்தி உள்ளேன். சிறுவாணி அணை தொடர்பாகக் கருணாநிதி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் நீர் இன்னும் தரப்படாத நிலையில் கேரள முதலமைச்சருக்கு நமது முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. இங்குள்ள அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற முயற்சி எடுக்கப்படும்.
நடவடிக்கை உறுதி
மாநகராட்சியில் செய்யப்படாத பணிகள் முடிக்கப்பட்டதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. எங்குத் தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பையில் இருந்து மின்சாரம்
மேலும் கோவை மாநகராட்சியில் 5 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் 145 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை கோவை மதுரை போன்ற மாவட்டங்களில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும். மேலும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.