கோவை தெற்குத் தொகுதி அதிமுக தான்.. அடித்து சொல்லும் அம்மன் அர்ஜுனன்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற்றது. கோவை தெற்குத் தொகுதியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், அதிமுகதான் தெற்குத் தொகுதியில் வெல்லும் என்று அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
கோவையில் திமுக வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற ஸ்பெஷல் அஸைன்மென்டுடன் செந்தில் பாலாஜியை களமிறக்கியிருந்தார் முதலமைச்ர் ஸ்டாலின். செந்தில் பாலாஜியின் வருகை கோவை திமுகவுக்கு திருப்புமுனையாக இருந்துள்ளது. 2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து 2026 தேர்தலில் கோவையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காய் நகர்த்தினர்.

ரூ. 5 ஆயிரம் பணப்பட்டுவாடா
கோவை மாவட்டத்தில் திமுக, அதிகளவு பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக மற்றும் சுயேட்சைகள் புகார் எழுப்பி வந்தனர். முக்கியமாக கோவை தெற்கில் திமுக ஒரு வாக்குக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. கரூரில் இருந்து வந்துள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.
பணப் பட்டுவாடாவை காரணம் காட்டி, கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நூற்றுக்கணக்கான புகார்கள் மின்னஞ்சல் மூலமாக அதிமுகவினர் அனுப்பி வந்தனர். ஆனாலும், தெற்குத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
எடப்பாடி ஆட்சி
இதைத்தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது. நான் சொல்லிய குற்றச்சாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு பொய் பேசும் பழக்கம் இல்லை. வேட்பாளர் அறிவிப்பில் என்ன சொன்னேனோ இன்றும் அதே தான் சொல்லுகிறேன். நான் தான் வெற்றி பெறுவேன்.
பணப்பட்டுவாடா குறித்து புகார் கடிதம் கொடுத்ததற்கு நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவுக்கு அதிகளவில் வாக்கு அளிக்க மக்கள் வந்துள்ளனர். ஆல்பாஸ், லேப்டாப் போன்றவை கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதே இளைஞர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம்.
தவெக உடை
அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால் அதிகளவில் வாக்குப் பதிவு வந்துள்ளது. SIR காரணமா என்பது எனக்கு தெரியவில்லை. மக்கள் கடந்த 5 ஆண்டுகளில் பட்ட கஷ்டம் காரணமாக மக்கள் வாக்களித்து உள்ளனர். தவெகவினர் ஒரே மாதிரியான உடை அணிந்து வருவது அவர்கள் விருப்பம். நாங்களும் தான் வெள்ளை நிற ஆடைகள் அணிந்து வருகிறோம். இளைஞர்கள் சொல்லும் மாற்றம் என்பது எடப்பாடி பழனிசாமி தான் என்றார்.














Click it and Unblock the Notifications