தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை.. நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து தமிழக பாஜகவும் வலியுறுத்தல்!
கோவை: தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற வேல்யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலியுறுத்தினார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதாக கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 6-ந் தேதி முதல் பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் வேல் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த முருகனுக்கு விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து கோவை அரசு விருந்தினர் மாளிகையில் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் சிவானந்தா காலனியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜக எம்.எல்.ஏக்கள்
இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிட கட்சிகளுக்கு பயம் விட்டுப்போய் விட்டது. 2021 தேர்தலில் கோவை பாஜகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும். கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர். அதேபோல பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிஸ்டர் கிளீன் ஆக இருப்பார்கள் என்றார்.
பொங்கும் பாஜக தொண்டர்கள்
கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன், வெற்றிவேல் வீரவேல் என்று கூறி பேச்சை தொடங்கினார். மேலும், தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசி அவர்களை சும்மா விடக்கூடாது. திமுகவின் இந்து விரோத போக்குக்கு எதிராக பாஜக தொண்டர்கள் பொங்கி எழுந்து வருகின்றனர். தமிழக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக எடுத்துச் செல்வோம். தமிழகத்தை தாண்டியும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வேர் யாத்திரை குறித்து ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர் என்றார்.
கோவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள்
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், எதிர்வரும் தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வார்கள். குறிப்பாக கோவையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கிராமத்தில் பிறந்த தன்னை பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பு வழங்கி அழகு பார்த்து இருக்கிறது. நம்முடன் பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாஜக தெலுங்கானா மாநிலத்தில் கவர்னர் பதவி வழங்கி உள்ளது. இந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
திமுக மீது தாக்கு
பாஜகவின் மாநில தலைவர் முருகன், வெயில் யாத்திரையை தொடங்கியதிலிருந்து திமுகவுக்கும் திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கும் தூக்கம் போய் விட்டது. வேல் யாத்திரை யாருக்கும் தொந்தரவு இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு அமைப்பு ரீதியில் பலம் குறைந்த கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மக்களிடையே வரவேற்பும் ஆதரவும் பெருமளவில் கிடைத்தது. கொரோனா தாக்கும் என பயந்து ஸ்டாலின் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் பாஜகவினர் ஊரடங்கு நேரத்திலும் வெளியே வந்து ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கினர்.
தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை
கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுள் முருகனையும் இழிவு இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஊழல் என்பது திமுகவுடன் பிறந்தது. ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. திமுகவின் ஆட்சியைப் பிடிக்கும் கனவு கனவாகவே இருக்கப் போகிறது. மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போலவே தைப்பூசத்துக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்றார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் தொட்ர்ந்து தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது தமிழக பாஜகவும் இந்த கோரிக்கையை எழுப்பி இருக்கிறது.