கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கிய வெள்ளநீரால் ஸ்தம்பித்த கோவை மாநகரம்.. தவிக்கும் மக்கள்
கோவை: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் கோவை மாநகரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. காந்திபுரம், உக்கடம், சிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கோவை மாநகரம் ஸ்தம்பித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. நேற்றிரவு 11 மணிக்கு பின்னர் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கனமழை பெய்து வருவதால் கோவை மாநகரத்தின் சாலைகள் ஆறுகளாகவும் குளங்களாகவும் மாறியுள்ளன.
சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி குளம்போல மாறியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வெள்ளநீரில் தரைப்பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் புளியம்பட்டியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications