கெளசல்யா தந்தை சின்னசாமி விடுதலை- சிறைவாசலில் ஜாதி அமைப்பு நிர்வாகிகள் சாலை அணிவித்து வரவேற்பு
கோவை: உடுமலைப்பேட்டை சங்கர் ஜாதி ஆணவக் கொலை வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறை வாசலில் ஜாதிய அமைப்பின் நிர்வாகிகள் சாலை அணிவித்து வரவேற்றனர்.
2016-ம் ஆண்டு ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கரும் கெளசல்யாவும் பட்டப்பகலில் கூலிப்படையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்தார். கெளசல்யா மட்டும் உயிர் பிழைத்தார்.

இது தொடர்பான வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருப்பூர் நீதிமன்றத்தால் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சின்னசாமியை விடுதலை செய்தது. மேலும் 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய தன்ராஜ், மணிகண்டன் ஆகியோரையும் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் கோவை சிறையில் இருந்து இன்று சின்னசாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சின்னசாமி உள்ளிட்ட 3 பேரையும் சிறைவாசலில் ஜாதிய அமைப்பு நிர்வாகிகள் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.













Click it and Unblock the Notifications