வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த வேன்! எப்படி நடந்தது? ஆட்சியர் விளக்கம்
கோயம்புத்தூர்: வால்பாறையில், 13வது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 13 பேர், கடந்த 15ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். டிரிப் முடித்துக்கொண்டு, நேற்று மாலை பொள்ளாச்சி வழியாக சொந்த ஊர் செல்வதற்காக வேனில் வந்துக்கொண்டிருந்த போது, வால்பாறை மலைப்பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில், வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "நேற்று மாலை 5 மணியளவில், வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில் கேரள மாநில பதிவெண் கொண்ட வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் 8 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 13 பயணிகள் இருந்தனர். விபத்து நடந்ததை அறிந்த தீயணைப்புதுறையினர், வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் உடனுக்குடன் மீட்பு பணியை தொடங்கினர்.
ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு வைத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். நேற்றிரவு 7 பெண்கள் 2 ஆண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். இன்று பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஒரு பயணி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே, இரு மாவட்ட ஆட்சியர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்களை சொந்த ஊர் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்திருக்கிறேன். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. காவல்துறை விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவில்தான் விபத்துக்கான காரணம் தெரியும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications