வால்பாறை விபத்து.. தொடரும் உயிரிழப்பு.. உறவினர்கள் அதிர்ச்சி புகார்
கோவை: கேரளா மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து கடந்த வாரம் விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் வால்பாறை விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு. சிகிச்சையில் இருந்தவருக்கு கோவையில் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்று உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். மொத்தம் 8 பெண்கள், 5 ஆண்கள் என 13 பேர், கடந்த வாரம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்குச் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

வால்பாறை விபத்து
வால்பாறையில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். பிறகு பொள்ளாச்சி வழியாக கேரளா திரும்ப முடிவு செய்துள்ளனர். அவர்கள் வந்த சுற்றுலா வேனை முகமது ஃபாசித் (21) என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். அந்த வேன் வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அங்கிருந்து தடுப்புச் சுவரில் மோதி வேன் மலையில் இருந்து கவிழ்ந்தது. சுமார் 800 அடி பள்ளத்தில் வேன் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவு சாலையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அஜிதா (54), ரம்லா (52), ஜூஹ்ரா (43), ஆஷா (41), மஜீத் (43), சஜிதா (45), ஷகிலா (37), ருகியா (39), ஹிஷாம் (12) ஆகிய 7 பெண்கள், 2 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலி எண்ணிக்கை உயர்வு
ஓட்டுநர் முகமது ஃபாசித், நெவ்ஷாத் (39), ஷாஜிதீன் (11), மஸ்னீன் (10) ஆகிய 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கேரளா அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஒரே பள்ளியில் பணிபுரியும் 9 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. நெவ்ஷாத் என்ற பள்ளி ஊழியர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் வால்பாறை விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
உறவினர்கள் புகார்
இதனிடயே நெவ்ஷாத்துக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியமாக இருந்தனர். சரியாக சிகிச்சை வழங்கவில்லை. மனித உயிருக்கு மதிப்பில்லை. அங்குள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு மருத்துவம் பற்றி எதுவும் தெரியவில்லை.
4 நாட்களாக அவருக்கு உரிய சிகிச்சை வழங்கியிருந்தால் நெவ்ஷாத்தை காப்பாற்றியிருக்க முடியும். அவரின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும்போது அழைத்ததற்கு உடனடியாக வரவில்லை. தூய்மை பணியாளர்கள் செவிலியர் பணி செய்கிறார்கள். மருத்துவமனையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று நெவ்ஷாத்தின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications