கேரளாவில் தொடர் கொலைகள்.. என்ஐஏ விசாரிக்கனும் - கோரிக்கை வைக்கும் வானதி சீனிவாசன்
கோவை: கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கேரளாவில் அடுத்தடுத்து இரு முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. கேரள எல்லையையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நடந்துள்ள பாஜக பிரமுகரின் கொலை அரசின் ஆதரவோடு நடந்துள்ளது எனவும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் , பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திமுகவினர் மீது வானதி புகார்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மழை வெள்ளத்திற்கு பிறகு அரசின் வழக்கமான செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில் கோவை பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் காயர் தொழிற்சாலைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்தி குறிப்பாக அமைச்சர்கள் பெயரை குறிப்பிட்டு வசூல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் கட்டாய வசூல்
திமுகவினரின் கட்டாய வசூல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்க தயங்குவதாக கூறிய வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி பணம் வசூலிப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

விலக்கு அளிக்க வேண்டும்
மேலும் ஜனவரி முதல் கைத்தறி ரகங்களுக்கு 12% ஜி.எஸ்.டி அதிகரிப்பதாக ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு விலக்களிக்க வேண்டும் என நாங்கள் கேட்டு கொள்வதாக கூறிய வானதி சீனிவாசன், இது தொடர்பாக மத்திய மாநில நிதி அமைச்சர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் எனவும் கூறினார்.

கேரள அரசு மீது புகார்
கேரளா பாஜக ஓபிசி பிரிவு செயலாளர் படுகொலை பற்றி பேசிய அவர் , கேரளாவில் மத தீவிரவாதத்தை வளர்க்க கூடிய குழுக்களுக்கு ஆதரவாக இருக்க கூடிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் தற்போது படுகொலை நிகழ்ந்து வருகிறது. எனவும், இந்த படுகொலைகளை NIA விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றும், இந்த கொலைகளை அந்நிய நாட்டில் திட்டமிட்டு செய்யப்பட கூடிய படுகொலைகளாக நாங்கள் பார்ப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications