வானதி சீனிவாசன் பீகாரில் பிஸி.. கோவையை கொஞ்சம் பார்க்கலாமே.. கேட்கும் நெட்டிசன்கள்
கோவை:கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தற்போது பீகார் மாநிலத்தில் கட்சி பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் இருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானவர், வானதி சீனிவாசன்.
பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

கமல்ஹாசனுடன் கடும் போட்டி
சட்டசபைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமல்லாது, வாக்கு எண்ணிக்கையின் போதும் இது எதிரொலித்தது. மிக சொற்ப வாக்கு எண்ணிக்கையில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இறுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

பாஜக பிரச்சாரம்
அப்போது தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசனுக்கு எதிராக பாஜகவினர் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த விஷயம், அவர் சென்னையை சேர்ந்தவர் மற்றும் நடிகர் என்பதுதான். ஒரு வேளை இங்கு வெற்றி பெற்றால் அவரை தொகுதி மக்கள் சென்னைக்குச் சென்று பார்க்க வேண்டும், அந்த நிலைமையை கோவை மக்களுக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர் நடிகர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று விடுவார், தொகுதி மக்கள் பார்க்க முடியாது என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

வானதி சீனிவாசன் பதவி அப்படி
இப்போது வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக வந்திருந்தாலும் கூட, அவரது கட்சிப் பணி நிமித்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறார். தேர்தல் முடிந்ததுமே, மேற்கு வங்கம் சென்று போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

பீகாரில் வானதி
இப்போது, இப்படித்தான் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெறும் பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு வானதி சீனிவாசன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு மகளிரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு
பாட்னாவில், வானதி சீனிவாசன் பீகார் மாநில துணை முதல்வர் ரேணு தேவி மற்றும் பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அது பற்றிய படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

கோவை மக்கள் காத்திருப்பு
வானதி ஸ்ரீனிவாசன் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மகளிரணியினர் கொடுக்கும் உற்சாக வரவேற்பு தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அவர் படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் வானதி சீனிவாசன் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் தொகுதி தொடர்பான குறைகளை பேசுவதற்காக கோவை தெற்கு தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது கள நிலவரம். நெட்டிசன்களும் வானதி டுவிட்டர் பக்கத்திற்கு போய், அப்படியே கோவையை கொஞ்சம் கவனிங்க என கேட்கின்றனர்.












Click it and Unblock the Notifications