ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
கோவை: தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள் என தமிழக பாஜக மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை பூலுவபட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் டீக்கடையில் சிலர் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க விவரம் எழுதிக் கொண்டிருந்தனர்.
பாஜக பணப் பட்டுவாடா: அதன்முடிவில் ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதிமணி என்பவர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணம் மற்றும் வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தாங்கள் விவசாயிகள் என பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குவாதம் செய்தனர்.
வானதி சீனிவாசன்: இந்நிலையில் தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள் என தமிழக பாஜக மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.
அண்ணாமலைக்கே வெற்றி: நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளார். மக்களின் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாஜக குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும். கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும். அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
பூத் ஏஜெண்ட் பணம்: கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி. இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும் .கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். 400 எம்.பி.க்களில் இவரும் ஒருவராக இருப்பார். தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள்.
திமுக மீது குற்றச்சாட்டு: பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை.வெளிப்படையாக திமுக அதிமுக பணம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க , ஆட்களை செட் பண்ணி பாஜக பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications