கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்.. குட் நியூஸ் சொன்ன எல்.முருகன்
கோவை: சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எல். முருகன். "கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒரே மாதத்தில் மிக வேகமாக நிறைவேற்றி தந்த மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற, கோவை - பொள்ளாச்சி இடையேயான முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழாவில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தோம் என்று பதிவிட்டிருந்தார். .
தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் 6000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய் தான் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார் எல்.முருகன்.












Click it and Unblock the Notifications