ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் முறைகேடு.. டார்கெட் நிர்ணயித்து வசூல்: விஷ்வ ஹிந்து பரிஷத் பரபர புகார்
கோவை: கோவை மாவட்டம் ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்கு சாற்றப்படும் புடவைகளை கோவில் கணக்கில் வரவு வைக்காமல் வெளியில் விற்பதாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் திருக்கோவில் - திருமடங்கள் தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக் என்பவர் இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆனைமலை ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலில் நடக்கும் அநியாயத்தின் உச்சம். கேள்வி கேட்பதற்கு கூட ஆளில்லாமல் ஆகிவிட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிராமத்தில் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில் மிக பிரசித்தம். இங்கு ஏழை, எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் அம்மனை காண வந்து செல்கின்றனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேற அம்மனிடம் பிரார்த்தனை செய்தோ அல்லது வேண்டுதல் நிறைவேறிய பிறகோ அம்மனை காண வரும் பக்தர்கள் அம்மனுக்கு வஸ்திரம் சாற்றுவது வழக்கம். பொதுவாக திருக்கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்படும் பொருட்கள் எதுவாயினும் (குறிப்பாக சேலை, வேஷ்டி, மணி, ஏனைய பொருட்கள்) திருக்கோவில் ஊழியர்களால் வரவு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டே பின்னரே அம்மனுக்கு சாற்றுவது வழக்கம்.
நாள் ஒன்றுக்கு ஸ்ரீ மாசாணியம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்படும் புடவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 500 முதல் 1000 புடவைகள் சாற்றப்படும். ஆனால், இந்தப் புடவைகளை எந்த புத்தகத்திலும் ஊழியர்கள் வரவு வைப்பதில்லை. மாறாக இந்த புடவைகள் அம்மனுக்கு சாற்றி முடித்தவுடன் மறுபடியும் ஜவுளிக் கடைகளுக்கு செல்கிறது. அங்கு மறு விற்பனை செய்யப்பட்டு மீண்டும் பக்தர்களின் கைகளுக்கே வருகிறது.
அதுமட்டுமல்ல, பக்தர்கள் வழங்கும் காணிக்கைப் பொருள்களும் மறு விற்பனைக்கு வருவது கொடுமையிலும் கொடுமை. இந்த ஊழலுக்கு அந்தக் கோவிலின் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தான் வேதனை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்தக் கோவிலை நாசம் செய்து வருகின்றனர். இதனை அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் கண்டும் காணாதது போல உள்ளனர்.
மேலும், இந்த கோவிலில் தட்டு காணிக்கை தொடங்கி, விஐபி வரிசையில் வருபவர்களிடம் பணம் பெறுவது, உபயதாரர்களிடம் பணம் பெற்றுத் தருவது, வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு சாத்தப்படும் புடவைகளை ஏஜெண்ட்கள் மூலம் வெளியில் விற்று வரும் பணம் வரை மாதாமாதம் இவ்வளவு லட்சம் கட்டாய வசூல் செய்தே ஆக வேண்டும் என டார்கெட் நிர்ணயித்து செயல்படுகின்றனர்.
எல்லாவற்றையும் விட பெரிய சோகம் அனுதினமும் பக்தர்களுக்கு வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு மோசமான சாப்பாடும், பக்தர்கள் பணத்தில் பெறக்கூடிய பொருட்களை வைத்து அறநிலையத்துறை அலுவலர்களுக்கு வடை பாயசத்துடன் தனி சாப்பாடும் போடப்படுகிறது என்பது வெட்கக்கேட்டின் உச்சக்கட்டம்.
இந்த முறைகேடுகளைத் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் ஆனைமலை வட்டாரத்தில் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications