கோவை பீப் பிரியாணி கடை விவகாரம்.. ஊர் மக்கள் சொல்வது என்ன.. போலீசில் பரபரப்பு புகார்
கோவை: கோவை கணபதி அருகே உடையாம்பாளையம் பகுதியில் கோவில் அருகே தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி விற்பனை செய்த வியாபாரிக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நேற்று மறியலின் போது போலீசிடம் விளக்கம் அளித்த ஊர் மக்கள், முன்னதாக பீப் பிரியாணி விற்ற ரவி மற்றும் ஆபிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா - ரவிக்குமார் தம்பதி, தள்ளுவண்டி கடையில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்து வருகிறார்கள் இந்த நிலையில் அந்தக் கடைக்கு புதன்கிழமை அன்று பா.ஜ.க ஓ.பி.சி அணியின் கோவை மாவட்ட செயலாளரான சுப்பிரமணி (36) , அந்த பகுதியின் வார்டு உறுப்பினரான ராமமூர்த்தி என்பவருடன் அங்கு சென்று, அந்தப் பகுதியில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என்று வற்புறுத்தியதுடன் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் சர்ச்சையானது. தொடர்ந்து பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவை உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் துடியலூர் காவல் நிலையத்தில், கோயில் அருகே பீப் பிரியாணி விற்ற ரவி மற்றும் ஆபிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக ஊர் தலைவர் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், கோவை, உடையாம்பாளையம் பகுதியில் பல்வேறு ஜாதி மற்றும் வேறு மதத்தினர் ஒற்றுமையாக காலம், காலமாக வாழ்ந்து வருகிறோம். அப்பகுதியில் அதிக அளவில் கோவில்கள் உள்ளது.
இந்நிலையில் கோவிலுக்கு முன்பு கறி சமைத்து வியாபாரம் செய்து விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த ஊர் தலைவர் பழனிச்சாமி தலைமையில் அப்பகுதி கவுன்சிலர் ராமமூர்த்தி, சுப்பிரமணி மற்றும் சிலர் சென்று அந்த கடை உரிமையாளர்களிடம் எங்களது பகுதியில் உள்ள கோவில் முன்பு அகமவிதிகள்படி கறி சமைத்து தாங்கள் விற்பது எங்களது நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்று கூறினார்கள்.
மேலும் கோயிலில் இருந்து தள்ளி, சில மீட்டர் தொலைவில் தள்ளி கடை அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். தாங்கள் கூறியதற்கு உரிமையாளர் சரி என்று கூறிய நிலையில், அவரது மனைவி ஆபிதா நாங்கள் அப்படித் தான் வைப்போம், உன்னால் முடிந்ததை பாரு என்று ஒருமையில் பேசி தகராறு செய்தார். மேலும் அவர் அவரது செல்போனில் அவர்களை படம் எடுத்தார். அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு வீடியோ எடுத்து சில காட்சிகளை மட்டும் அதை சில நாள் கழித்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை தூண்டும் விதத்தில் ஊர் மக்களின் நிம்மதியை கெடுக்கும் விதத்திலும், எங்களது இறை நம்பிக்கையை அவமதிக்கும் படியும் செய்து உள்ளார்கள். எனவே ரவி மற்றும் ஆபிதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனிடையே நேற்று இரவு உடையாம்பாளையம் ஊர் பொதுமக்கள் பாஜக நிர்வாகி சுப்பிரமணியம் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த போலீசாரிடம், பீப் கடை வைத்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications