கோவை அரசு மருத்துவமனையில் சங்கீதா.. குடும்ப கட்டுப்பாடு செய்தும் கர்ப்பம்.. கடைசியில் இப்படியா ஆகணும்
கோவை: கோவை அம்மன்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி சங்கீதாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் குடும்ப கட்டுப்பாடு செய்த நிலையில் கர்ப்பமானது எப்படி என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இது ஒரு புறம் எனில், மருத்துவமனையில் டாக்டர்களின் அலட்சியத்தால் தாய்-சேய் இப்போது உயிருடன் இல்லை என சங்கீதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
கோவை அம்மன்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த 38 வயதாகும் அண்ணாதுரை கூலி தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி சங்கீதா(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சங்கீதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 22-ம் தேதி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய்-சேய் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் சங்கீதாவின் வயிற்றில் இருந்து 6 மாத குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தார்கள். ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்,
தொடர்ந்து சங்கீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாம்.இதனால் சங்கீதாவிற்கு மீண்டும் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் உயிரிழந்தார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சங்கீதாவின் உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் சங்கீதா இறந்து விட்டதாக குற்றம்சாட்டினர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் கூறும்போது, சங்கீதாவிற்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் எப்படி கர்ப்பம் தரித்தார்.? தற்போது கூட அறுவை சிகிச்சை முடிந்து தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில், "சங்கீதா கடந்த 22-ந் தேதி 3-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் எடை 80 கிலோ இருந்தது. மேலும் உயர் ரத்த அழுத்தம் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ரத்த அழுத்தம் அதிகமானதால் தாயை காப்பாற்ற முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை உயிரிழந்த நிலையில்தான் இருந்தது. வழக்கமாக 6 மாத குழந்தை 800 கிராம் எடையாவது இருக்க வேண்டும். ஆனால் இந்த குழந்தை 360 கிராம் எடையில்தான் இருந்தது.
அறுவை சிகிச்சை செய்து தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு இருந்தது தெரியவந்ததும் சி.டி. ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தப்பட்டு, மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் சங்கீதா இறந்து விட்டார். இங்கு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. குடும்ப கட்டுப்பாடு செய்தாலும் கர்ப்பம் தரிக்க 0.5 சதவீதம் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications