மின்சாரத் துறையில் 56,000 காலிப் பணியிடங்கள்; எப்போது நிரப்பப்படும்? -செந்தில்பாலாஜி புதிய பதில்..!
கோவை: மின்சாரத்துறையில் எந்தெந்த பணியிடங்களுக்கு அவசரமாக ஆள் தேவைப்படுகிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மின்சாரத்துறை 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் உள்ள சூழலில், துறையில் உள்ள 56,000 காலிப் பணியிடங்களையும் முழுமையாக நிரப்புவது சாத்தியமற்றது என்பதை சூசகமாக அவர் கூறியிருக்கிறார்.

1 லட்சம் கம்பங்கள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 4,500 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

எப்போது நிரப்பப்படும்?
இன்னும் பல மின்மாற்றிகள் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் இப்பணிகள் முடிவடைந்த பிறகு விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்ற தகவலையும் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார். இதேபோல் தமிழக மின்சாரத்துறையில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாகவும் அதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என வழக்கமான பதிலை கூறாமல், எந்தெந்த பணியிடங்களுக்கு அவசரமாக ஆள் தேவைப்படுகிறதோ அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.

16,000 கோடி வட்டி
மின்சாரத்துறை மாதம் 16 ஆயிரம் கோடி வட்டி மட்டும் கட்டி வருவதாகவும் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் இத்தகைய சூழலில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பப்படுவது என்பது சாத்தியமற்றது என்பதால் அவர் உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதனிடையே மின்சாரத்துறையில் அடுத்த வாரம் வேலை கிடைத்துவிடும் அடுத்த மாதம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துவிடும் என எதிர்பார்த்த பலரும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கட்டமைப்பு
கடந்த அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டதாகவும் அதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பையும் அதிமுக அரசு செய்யவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications