அந்த ஒரு வார்த்தை! இப்படி எல்லாம் பேசுற அப்பா, அம்மா இருந்தா கொடுமைதான்! ரிதன்யாவிற்கு நடந்த கொடுமை
சென்னை: வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ரிதன்யாவின் பெற்றோர் அவருக்கு ஆதரவாக செயல்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிதன்யாவுக்கும், கவினுக்கும் 2025 ஏப்ரல் 11-ம் தேதி திருமணம் நடந்தது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் நகை மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்ததாகவும், மூன்றாவது வாரத்தில் இருந்து வாக்குவாதங்கள் தொடங்கியதாகவும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணாதுரையும், ரிதன்யாவின் தாயாரும் தலையிட்டு ரிதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

ரிதன்யாவிற்கு நேர்ந்த கொடுமை
கவின் அவ்வப்போது ரிதன்யாவைப் பார்க்க வந்துள்ளார். 20 நாட்களுக்குப் பிறகு, கவின் அவளை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஜூன் 22-ம் தேதி கவின், ரிதன்யாவை அவரது பெற்றோரின் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தபோது, ரிதன்யா சோகமாகவும், மன அமைதி இழந்தும் காணப்பட்டார். அப்போது ரிதன்யா, "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என்றும், நான் எனது பெற்றோர் வீட்டில் தங்க விரும்புவதாகவும்" கூறியுள்ளார்.
கல்யாணம் ஆன 10-வது நாளே ரிதன்யா, "அவங்க வீட்டில் கொடுமைப்படுத்துறாங்கம்மா, என்னால் அங்கே இருக்க முடியாது" என்று கூறியுள்ளார். ஆனால், ரிதன்யாவின் பெற்றோர் "அதெல்லாம் போக போக சரியாகிடும், சகிச்சுக்கிட்டு இருந்துடுமா" என்று கூறியுள்ளனர். தங்கள் பகுதியில் ஊரார், உறவினர்கள் தன் மகள் வீடு திரும்பி வந்துவிட்டால் தவறாக பேசுவார்கள் என்பதால், பெற்ற மகளின் கஷ்டத்தை கூட செவி கொடுத்து கேட்காமல் விட்டேந்தியாக பேசியுள்ளனர். அந்த பேச்சே ரிதன்யாவிற்கு தனக்கு ஆதரவு செய்ய யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
ஆதரவு தராத பெற்றோர்
ஜூன் 28-ம் தேதி காலை 9.30 மணியளவில் ரிதன்யா தனது அப்பாவின் காரில் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றுள்ளார். பிற்பகல் 1 மணியளவில் ரிதன்யாவின் தொலைபேசியிலிருந்து அவரது தாய்க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ரிதன்யாவின் கார் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் ஓட்டுநர் இருக்கையில் மயக்க நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அண்ணாதுரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
அங்கு ரிதன்யா எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளார். உடனடியாக அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு ரிதன்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரிதன்யா சோகமான முடிவு
கணவர் வீட்டு கொடுமையால் மனமுடைந்து காணப்பட்ட ரிதன்யா, கடந்த 28-ம் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு காரில் சென்று, செட்டிபுதூர் பகுதியில் விஷம் குடித்து, காருக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். தென்னை மரத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி, "தன் சாவுக்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம்" என்று உருக்கமாக ஆடியோ அனுப்பியுள்ளார். மணமகன் வீட்டார் மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications