கோவையில் திமுக நேரடியாக களம் இறங்குவது ஏன்? அண்ணாமலை, எஸ்பி வேலுமணிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
கோவை: கோவையில் இந்த முறை திமுக நேரடியாக களம் இறங்கி இருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.. அண்ணாமலை கோவையில் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலைக்கு எதிராக திமுக வலுவான வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக சார்பில் கோவையில் நேரடியாக போட்டியிட்டு வென்று 28 வருடங்கள் ஆகிவிட்டது. கோவையில் கடைசியாக திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றது 1996ம் ஆண்டில். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான பெரிய எதிர்ப்பலை எழுந்திருந்தது. அந்த சமயத்தில் திமுக வெற்றி பெற்றது.அதற்கு முன்பு 1980ம் ஆண்டு கோவையில் திமுக வெற்றி பெற்றது.

1998ல் பாஜகவிடம் தோற்ற திமுக, அதன் பிறகு 1999 ம் ஆண்டு தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தது. பாஜகவிற்கு அந்த தொகுதியை வழங்கியது. அதன்பிறகு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே திமுக கோவை தொகுதியை வழங்கி வந்தது. 2014ல் மீண்டும் கோவையில் போட்டியிட்ட திமுக 3வது இடத்தை தான் பிடித்தது. 2014 தேர்தலில் அதிமுகவின் நாகராஜன் கோவையில் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றார். அடுத்த இடத்தை பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் பிடித்தார். திமுக வேட்பாளராக களம் இறங்கிய கணேஷ்குமார் 3வது இடத்தையே பிடித்தார்..
2019ம் தேர்தலை பொறுத்தவரை கோவையில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 571,150 வாக்குகள் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். அடுத்த இடத்தை பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் கோவை லோக்சபா தொகுதியில் இந்த முறை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. கோவையில் பாஜக சார்பில் இரண்டு முறை எம்பியாக வென்ற சிபி ராதாகிருஷ்ணன், தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை என்பதால் அங்கு அண்ணாமலை நேரடியாக களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே திமுக கூட்டணி சார்பில் கோவையை கேட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பலத்த போட்டி இருந்தது. ஆனால் திமுகவோ இருவருக்குமே கோவையை தரவில்லை.. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியும் கோவையை கேட்டது. ஆனால் அவர்களுக்கும் இந்த முறை திமுக தரவில்லை.. தானே நேரடியாக களம் இறங்க திமுக முடிவு செய்து களம் இறங்கி உள்ளது. 1996ம் ஆண்டுக்கு பின் மீண்டும் கோவையில் வெல்லும் முனைப்பில் திமுக இருக்கிறது..
1998ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பின் கோவை பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக மாறியது. கோவை தற்போது அதிமுகவின் கோட்டையாக உள்ள நிலையில், அங்கு பாஜகவிற்கும் கணிசமாக செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் கோவை அதிமுகவின் கோட்டை என்ற பிம்பத்தையும், பாஜகவின் வாக்கு வங்கியையும் காலி செய்ய திமுக விரும்புகிறது.
அதனால் திமுக இந்த முறை கோவையில் தனி கவனம் செலுத்துகிறது. கோவையில் பாஜகவில் அண்ணாமலை நிறுத்தப்படலாம் என்று தகவல் பரவும் நிலையில் அவரை எதிர்த்து மகேந்திரனை திமுக களம் இறக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் செந்தில் பாலாஜியும் சிறையில் இருந்தபடியே சில பெயர் பட்டியலை வழங்கி உள்ளாராம். அவர்களில் யாரை நிறுத்தினாலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதுவும் பரிசீலனையில் உள்ளதாம். ஒரு பக்கம் அதிமுகவில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் மறுபக்கம் பாஜகவில் அண்ணாமலை என கோவையில் பெரிய சவால்களுக்கு மத்தியில் திமுக களம் இறங்குவது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications