கோவை மருதமலை கோயிலில்.. யாருப்பா அது மொரட்டு ஆளா இருக்க.. கிட்ட போய் பார்த்து.. அரண்ட மக்கள்
கோவை: கோவை மருதமலை முருகன் கோவில் அருகே உண்டு உறைவிடப் பள்ளியை தேடி வந்த விருந்தாளிகளை கண்டு அந்த பகுதி மக்கள் பயந்து போனார்கள்.. இரவு வேளையில் திடீரென விருந்தாளியாக வந்த இரண்டு காட்டு யானைகள் என்ன செய்தன என்பதை பற்றி பார்ப்போம்.
கோவையின் மையப்பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது மருதமலை. மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில், அவரது ஏழாவது படைவீடு என்கிற அளவிற்கு போற்றப்படுகிறது. இந்த கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.

மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். மருதமலையில் கணிசமாக பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள்தான் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறார்கள். மருதமலை பழங்குடியின குழந்தைகள் படிப்பதற்காக மலை மேல் உண்டு உறைவிடப் பள்ளி இருக்கிறது. அங்கு 5-ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மருதமலையில் வாகனங்கள் செல்லும் மலைப்பாதை மற்றும் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சர்வ சாதாரணமாக யானைகள் மருதமலைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதுவரை பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட்டது இல்லை.
எனினும் பக்தர்கள் நலன் கருதி, மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மருதமலையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கூடத்திற்கு அருகே நேற்று இரவு 2 காட்டு யானைகள் முகாமிட்டு நின்று கொண்டே இருந்தன. பின்னர் பள்ளிக்கு சென்று அங்கு உணவு ஏதும் கிடைக்குமா என்று தேடிப்பார்த்தன.
அதை பார்த்து மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அங்கு உணவு இல்லை. இதுபற்றி அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே வனத் துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி மருதமலைக்கு யானைகள் வருவதால் மாலை நேரங்களில் மலைக்கு செல்வோர் கவனமாக செல்வது நல்லது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.












Click it and Unblock the Notifications