கழிவறை செல்வதாக சொன்ன மாணவி.. கல்யாணம் முடித்து வந்ததால் அதிர்ந்த பெற்றோர்! போக்சோவில் 3 பேர் கைது
கோவை: மேட்டுப்பாளையம் அருகே பதினோராம் வகுப்பு மாணவி காணாமல் போன வழக்கில் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் மாணவியை மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியொன்றில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த மே 9 ஆம் தேதி இரவு வீட்டில் கழிவறைக்கு செல்வதாக கூறிய இவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்த சரவணக்குமார் (வயது 25) காணாமல்போன 11 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தது தெரிந்தது.
மாணவி காணாமல்போன மறுநாளே காரமடை அருகே அமைந்துள்ள பெட்டத்தம்மன் கோயிலில் அவருக்கும் சரவணக்குமாருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு திம்மம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், தாயனூரை சேர்ந்த சூர்யா உள்ளிட்டோர் திருமணம் செய்து வைத்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சந்தோஷ்குமார், சூர்யா, சரவணக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த காரமடை போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், சிறுமியை மீட்டு மகளிர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.