இலங்கையில் டமால் டமால் என வெடித்து சிதறும் கேஸ் சிலிண்டர்கள்- நவ.1 முதல் 863 சிலிண்டர்கள் வெடிப்பு!
கொழும்பு: உலக நாடுகள் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சத்தால் உறைந்து கிடக்கிறது. ஆனால் இலங்கையிலோ ஒவ்வொரு நாளும் வெடித்து சிதறும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இலங்கையில் இதுவரை மொத்தம் 863 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்வது நாள்தோறும் செய்தியாகிவிட்டது. கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், அம்பாறை, மலையகம் என இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இத்தகைய சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

863 சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள்
வெலிகம பகுதியில் கடந்த நவம்பரில் சுற்றுலா விடுதியில்தான் முதலாவது சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தற்போது வரை மொத்தம் 863 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளன. இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்திருக்கின்றன. இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால் இதுவரை மொத்தம் 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 18 சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளில் பெருமளவு உடைமைகள் சேதமடைந்துள்ளன.

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு
இத்தகைய சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களாள் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பதில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை நாடவும் தொடங்கி இருக்கின்றனர். இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, கடுமையான விலை உயர்வு என ஒருபக்கம் நெருக்கடி நீடிக்கும் நிலையில் தற்போது மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பொதுமக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சமையல் எரிவாயு கலப்படம்?
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கையில் மட்டும் திடீர் திடீரென வெடிக்க என்ன காரணம்? சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் இருக்கும் பியுட்டேன், புரோபீன் ஆகியவற்றின் அடர்த்திகளில் ஏதோ ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது முதல் கருத்து. இதனையே எளிதாக்கி சொல்வதானால் சமையல் எரிவாயுவிலும் கலப்படம் செய்திருக்கிறார்கள் என்பதுதான். இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இதனையடுத்து இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, சிறப்பு குழு ஒன்றை அமைத்திருந்தார்.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு
இக்குழு தற்போது அதனது அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. இந்த அறிக்கையில் 2019-ம் ஆண்டு இலங்கையில் 18 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தன; 2020-ம் ஆண்டு 31 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 40 லட்சம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications