கோத்தபாய ராஜபக்சேவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு- இந்தியாவுக்கு வர அழைப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கொழும்பில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று தாம் நவம்பர் 29-ல் இந்தியா வருகைதர உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார்.
இந்நிலையில் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போதும் கோத்தபாயவை இந்தியாவுக்கு வருகை தர ஜெய்சங்கர் முறைப்படி அழைப்புவிடுத்தார்.
இதனை தாம் ஏற்றுக் கொண்டு இந்தியா செல்ல இருப்பதாகவும் இப்பயணத்தின் போது பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சே அதிபராக பதவி ஏற்ற பின்னர் இலங்கைக்கு சென்ற முதலாவது வெளிநாட்டு அமைச்சர் ஜெய்சங்கர். முன்னதாக நேற்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றபோது அதன் ஆலோசகராக இருந்தவர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.