2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்!
கொழும்பு: சர்வதேசத்தை அதிர வைத்த அதிபர் தேர்தல்களில் ஒன்றாக 2019-ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இலங்கையில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அந்நாட்டு அரசுக்குமான இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இப்போரின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்த இறுதிப் போரின் போது அத்தனை சர்வதேச யுத்த விதிகளையும் மீறி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

போர்க்குற்றவாளி கோத்தபாய
இத்தகைய போர்க்குற்றங்களுக்கு காரணகர்த்தா அன்றைய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. கோத்தபாய ராஜபக்சே மீது ஐநா மனித உரிமை ஆணையமும் குற்றம்சாட்டியிருந்தது.

சர்ச்சைகளின் நாயகன்
இப்படியான சூழலில் இலங்கை அதிபர் தேர்தலில் போர்க்குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சே வேட்பாளராக களமிறங்கினார். அப்போதே அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற கோத்தபாய, எப்படி இலங்கை தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சர்ச்சை வெடித்தது.

கோத்தபாய- சஜித் போட்டி
கோத்தபாய ராஜபக்சேவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச போட்டியிட்டார். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்த கோத்தபாய ராஜபக்சே, தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் பிரேமதாச மகன் சஜித் பிரேமதாச இருவரும் மோதினர்.

தேர்தல் முடிவுகள்
இத்தேர்தலில் தமிழர் தரப்பு எத்தகைய ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டையும் மேற்கொள்ளாமல் ஊசலாட்டமான போக்கை கடைபிடித்தது. ஒருகட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளோ சர்வதேசத்தை திகைப்புக்குள்ளாக்கின.

கோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு
ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சேவை நிராகரித்து சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தனர்; ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள், கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆதரவை வழங்கினர். மலையகத் தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் கோத்தபாயவை ஆதரித்தனர். இதனால் கோத்தபாய ராஜபக்சே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய அதிபரானார்.

குற்றச்சாட்டுகளின் கதி என்ன?
ஒரு போக்குற்றவாளியாக சர்வதேச சமூகத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட கோத்தபாய ராஜபக்சே, இலங்கையின் அதிபராகவே பதவியேற்றார். இதனால் லட்சக்கணக்கான ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கும் வழிகள் அடைபட்டுப் போயின; இறுதி யுத்தத்தின் போது காணாமல் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர் கதி என்ன என்பதே தெரியாமலே போய்விடுகிற நிலைமையும் நீடித்தது.

ஜனநாயகத்தின் பெயரில் ராணுவ அரசு
கோத்தபாய ராஜபக்சேவின் கைகளில் அதிகாரம் கிடைத்ததால், அவருடன் பணியாற்றிய முன்னாள் ராணுவ தளபதிகள் அரசின் முதன்மை பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் போர்க்குற்றங்களின் பங்குதாரர்கள். ஒட்டுமொத்தமாக போர்க்குற்றவாளிகள் அதிகாரம் செலுத்துகிற ராணுவமயப்படுத்தப்பட்ட தேசமாக இலங்கை உருமாறிக்கிடக்கிறது. ஈழத் தமிழருக்கு கிடைக்க வேண்டிய நீதியோ கும்மிருட்டில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications