கை மீறி சென்றுவிட்டது.. அதேநேரம் வன்முறைக்கு நாங்கள் காரணமில்லை! தலைமறைவாக உள்ள நாமல் ராஜபக்ச பரபர
கொழும்பு: இலங்கை நாட்டில் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகளும் கூட பெரியளவில் பலன் தரவில்லை.
ம.பி.யில் கொடூரம்.. உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்
இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குக் கூட அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போராட்டம்
இப்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடிக்கு ராஜபக்ச அரசு தான் காரணம் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் நடைபெற்று வந்த இந்த மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதையடுத்து அங்கிருந்த அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அங்குப் பதற்றமான சூழலே நிலவுகிறது.
ராஜினாமா
முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த மகிந்த ராஜபக்ச, பின்னர் நிலைமை மோசமானதை உணர்ந்து பதவி விலகினார். இந்தச் சூழலில் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் மகிந்த ரஜாபக்ச, அவரது மகன் உள்ளிட்ட 15 பேர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டம் ஒழுங்கு இல்லை
இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச, "எந்தவொரு விஷயத்திற்கும் வன்முறை தீர்வாகாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இரு தரப்பில் இருந்தும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை இருந்தது. இதனால் தான் வன்முறை வெடித்தது. இலங்கையில் இப்போது சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இல்லாத நிலையே உள்ளது.
யார் காரணம்
இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஆனால், அதற்காக இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு எங்கள் கட்சியினர் மட்டும் தான் காரணம் என்று கூற முடியாது. இது ஒரே இரவில் நடந்த வன்முறை இல்லை. இரு தரப்பிலும் இருந்தும் ஆத்திரமூட்டல் நடவடிக்கை நடந்துள்ளது. வன்முறைக்கு இதுவே காரணம். நாட்டில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
தலைமறைவு
ஏற்கனவே, வன்முறை காரணமாக மகிந்த ராஜபக்சவின் வீடு கொளுத்தப்பட்டது. மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் இப்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் இப்போது எங்கே உள்ளனர் என்பதே தெரியவில்லை. இந்தச் சூழலில் நாமல் ராஜபக்ச வன்முறைக்கு இரு தரப்பிலும் நடைபெற்ற சம்பவங்களே காரணம் என்று கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விசாரணை
ஏனென்றால், இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்த வழக்கும் கொழும்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அப்போது முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.