கோத்தபாய ராஜபக்சேவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கின்றேன்: ஆல்-இன்-ஆல் ஜோதிடர் ஞானாக்கா அதிரடி
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் தாம் துண்டித்துக் கொள்வதாக பிரபல ஜோதிடர் ஞானாக்கா அதிரடியாக அறிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே அடித்து விரட்டப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் பலரது வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் பிரபல ஜோதிடர் ஞானாக்காவின் சொகுசு ஹோட்டல்கள், கார்களும் அடங்கும்.

மகிந்த, கோத்தபாய ராஜபக்சேக்களுக்கான ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்கா. இதனால் ராஜபக்சேக்கள் மீதான கோபம், ஞானாக்கா மீதும் திரும்பியது. இதனையடுத்து ஞானாக்காவின் பல லீலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகின. அதில் கோத்தபாய ராஜபக்சேவை நீராட்டிவிட்டவர் ஞானாக்கா என்பதும் ஒன்று. ஆனால் இதனை திட்டவட்டமாக ஞானாக்கா மறுத்திருந்தார்.
இந்த ஞானாக்காவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் ஹிருணிக்கா தலைமையில் போராட்டங்களும் நடந்தன. அப்போது ஞானாக்கா குறித்து ஹிருணிக்கா தெரிவித்த பல கருத்துகள் பெரும் சர்ச்சையாகின.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினருடனான அனைத்து உறவுகளையும் தாம் துண்டித்துக் கொள்கிறேன் என ஜோதிடர் ஞானாக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளார். அத்துடன் கோத்தபாய குடும்பத்துடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு இருந்து வந்தது; ஜனாதிபதியான பின்னர் ஒரு ஆண்டுகாலம் எம்மை சந்திக்க கோத்தபாய வரவில்லை. ஒரே ஒரு முறை சிகிச்சைக்காக வந்திருந்தார் எனவும் ஞானாக்கா கூறினார். என்னுடைய சொகுசு ஹோட்டல், வாகனங்களை எரித்தது அரசியல்வாதிகள்தான், என்னைப் பற்றி அவதூறான தகவல்களை இனியும் தொடர்ந்து பரப்ப வேண்டாம் என்றும் ஞானாக்கா கூறினார்.
1980களின் இறுதியில் மருத்துவமனை ஊழியராக இருந்த ஞானாக்கா, குறி சொல்வதில் வல்லவர். அவரது உண்மையான பெயர் இதுவரை யாருக்கும் தெரியாது. தாமே காளியின் அவதாரம் என கோவில் கட்டி கோலோச்சிக் கொண்டிருந்தார் ஞானாக்கா. அவரது காலடியில் இலங்கை அரசியல்வாதிகள் வீழ்ந்து கிடந்தனர். இலங்கையின் நிர்வாகத்தையே ஞானாக்கா சொல்படியே கோத்தபாய ராஜபக்சே நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications