இலங்கை தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு!
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை மறுநாள் பதவி விலகவுள்ள நிலையில் தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் மாளிகை முற்றுகை
நேற்று முன்தினம் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஆனால் முன்னதாகவே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார்.

பிரதமர் வீட்டுக்கு தீ
பின்னர் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக மாளிகையை சூறையாடினர். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து போராட்டக்காரர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பழைய நாடாளுமன்ற வளாகத்தையும் கைப்பற்றினர். பின்னர் இரவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் போராட்டம் உச்சத்தை எட்டியது.

தொடரும் குழப்பம்
இதனிடையே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, ஜூலை 13ம் தேதி பதவி விலக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் உறுதி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தாங்கள் தயார் என்று அறிவித்துள்ளார்.

புதிய அதிபர்?
இந்த நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவே இலங்கையின் தற்காலிக அதிபராக மகிந்த யாப்பா அபேவர்தனா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பொருளாதார சூழல் மேம்பட்ட உடன், பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்சே புதிய அரசு அமைந்தவுடன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications