இலங்கையில் இந்திய வெளியுறவுத்துறை குழு- கச்சத்தீவு மீட்பு பேச்சுவார்த்தையா? என எதிர்க்கட்சிகள் பீதி!
கொழும்பு: இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய குழுவினர் நேற்று இலங்கை சென்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதா? என இலங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்துள்ளது. இதனால் இலங்கைக்கு இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. மேலும் இலங்கைக்கான உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மருந்து பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான குழு இலங்கைக்கு நேற்று சென்றது. இக்குழுவில் மத்திய நிதி அமைச்சக பொருளாதார துறை செயலர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தன.
இந்திய குழுவினர் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேசியது. இச்சந்திப்பின் போது இலங்கைக்கான பொருளாதார உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தலைமையிலான குழு சென்றது பெரும் சர்ச்சையாக உள்ளது. இது தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. எஸ்.எம் மரிக்காரே கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவின் 3 பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது என்றார். இலங்கைக்கு எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்தியா கடன் கொடுப்பதும் இல்லை. கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்காகவா இந்திய பிரதிநிதிகள் இலங்கை வந்தனர்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மரிக்காரே கூறினார்.
ஏற்கனவே கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகால குத்தகைக்கு திரும்பப் பெறக் கூடும்; இதற்காகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மத்திய அரசு, இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சென்னை நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை இப்போதைய தருணத்தில் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இலங்கை ஈழத் தமிழ் மீனவர்களும், கச்சத்தீவை இந்தியாவுக்கு மீண்டும் கொடுக்கக் கூடாது என கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications