விண்ணை முட்டும் விலைவாசி.. விழிபிதுங்கி நிற்கும் இலங்கை மக்கள்.. பீன்ஸ் ஒரு கிலோ 500 ரூபாயாம்..!
கொழும்பு : இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் விலைவாசி விண்ணை முட்டி உள்ள நிலையில் இரு வேளை உணவுக்குக் கூட அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், இலங்கை சர்வதேச நிதியத்தின் உதவியை கோர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்த இலங்கை, தற்போது சீனாவின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அதன் பிடியில் சிக்கி இருக்கிறது. தனது நாட்டு துறைமுகங்கள், கடலோர பகுதிகளை அதற்கு வர்த்தகரீதியாக தாரை வார்த்து இருப்பதுடன், அந்நாடு வழங்கிய கடன்களையும் வாங்கி கடன்கார நாடாகி இருக்கிறது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பும் 7.5 சதவீதத்தில் இருந்து அதள பாதாளத்தில் சரிந்துள்ளது. சீனா நுழைந்த பிறகே இலங்கையில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வு
ஒரு கிலோ மஞ்சள் விலை ரூ.7 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சாலைகளில் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சீனா காலடித்து வைத்த பிறகு, இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து இந்த அவலம் ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்நிய செலாவணி வர்த்தகத்தில் உலக நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன. இதில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, ஒவ்வொரு நாட்டிலும் அதன் நாணயத்தின் மதிப்பில் மாற்றங்கள் ஏற்படும்.

கொள்ளை லாபம் பார்க்கும் கடத்தல்கார்கள்
நாணயத்தின் மதிப்பு வீழ்ந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதை பயன்படுத்தி கொள்ளை லாபம் பெற, வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவார்கள். இதனால், அந்த பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயரும். இந்த நிலைதான், தற்போது இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளின் நாணயத்தின் மதிப்பு சமீபகாலமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இறக்குமதிக்கு தடை
அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, பால் பவுடர், சமையல் எரிவாயு, மண்ணெண்னெய், வெங்காயம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை உயர்வால், பணவீக்கம் மாதம் மாதம் அதிகரித்தது. பணவீக்கம் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்திய முதல் அரசு இலங்கைதான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தை நிறுத்த முயன்றபோது, ஆட்டோமொபைல்கள் மற்றும் பிற பொருட்களுக்கான இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை செய்தது.

விண்ணை முட்டும் விலைவாசி
இவ்வாறு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்திய ரூபாயில் ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரையின் விலை, தற்போது ரூ.220 ஆக உயர்ந்துள்ளது. நகர் பகுதியில் ரூ.220க்கு சர்க்கரை விற்பனை செய்யப்பட்டாலும், புறநகரங்கள், கிராமங்களில் ரூ.240க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி 200 ரூபாய் முதலும் பீன்ஸ் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணளவு உயர்ந்துள்ளதால் இரு வேளை உணவுக்கே அவதிப்படுவதாக அந்நாட்டு மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்

இன்னொரு சோமாலியா
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள், கடைகளின் முன்பாகவும், நியாய விலை கடைகளிலம் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமாக பதுக்கப்பட்ட சர்க்கரை உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு குறைந்த விலையில் விற்க ஒருங்கிணைக்கவும் ராணுவம் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னொரு சோமாலியவாக இலங்கை மாற வாய்ப்புள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications