"கொக்கரித்த" மே மாதத்தில்.. பற்றி எரியும் இலங்கை.. வெளிநாட்டுக்கு தப்பும் மகிந்த ராஜபக்ச..?
கொழும்பு : தீவு நாடான இலங்கையில் அரசுக்கு எதிராக வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பொருளாதாரக் கொள்கைகளை தவறாக நிர்வகித்ததால் தான் இலங்கை நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகக் கூறி கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கெதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் தோல்வி காரணமாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள், மக்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நாட்டில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
பற்றி எரியும் இலங்கை.. அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜினாமா
இந்நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று மாலை ராஜினாமா செய்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தார். இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மக்கள் மீது தாக்குதல்
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். தாக்குதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதையடுத்து, அங்கு அதிக அளவிலான ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார்.
வீடுகள் எரிப்பு
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. ஆனால் அவரது ராஜினாமாவுக்குப் பின்னர் இலங்கை முழுவதும் வன்முறை வெடித்தது. அமைதியாகப் போராடிய மக்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர்.
வெளிநாடு செல்ல முயற்சி
ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மே மாதம்
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இலங்கை அரசின் சார்பில் போர் வெற்றிநாளாக கடைபிடிக்கப்பட்டுவந்த மே மாதம் 19ஆம் தேதியை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களும் , இறுதி கட்ட போரில் ஈடுபட்டிருந்த புலிகளும் ஈவு ஈரக்கமின்றி இதே மே மாதத்தில் தான் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது சிங்களவர்களால் ஹீரோவாகப் பார்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவின் வீடுகளை அதே சிங்களவர்கள் எரித்து வருவது குறிப்பிடத்தக்கது.