அவர் இருந்திருந்தால் இலங்கையில் இப்படி நடந்திருக்காது? கொந்தளிக்கும் ராஜபக்சே.. யாரை சொல்கிறார்?
இலங்கையில் தீவிரவாத தாக்குதலை தடுக்க தற்போதைய அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில் தீவிரவாத தாக்குதலை தடுக்க தற்போதைய அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அரசு மீது அவர் சரமாரியான புகார்களை வைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இலங்கையில் 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

என்ன புகார்
இதுகுறித்து புகார் அளித்துள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கையில் ராணுவத்தின் பலத்தை குறைத்துக் கொண்டே வருகிறார்கள். இலங்கை ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை கூட கைது செய்கிறார்கள். இது தேசத்தின் பாதுகாப்பிற்கு நல்லது கிடையாது. இதை இப்போதாவது அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

ராணுவம் இல்லை
ராணுவம் இல்லாமல் ஒரு நாடு பாதுகாப்பாக இருக்காது. வெளிநாட்டின் கட்டுப்பாட்டில் தற்போது இலங்கை உள்ளது. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூறும் உத்தரவுகளை வைத்து தற்போது இலங்கை இயங்கி கொண்டு இருக்கிறது. நாம்தான் நமது பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

இப்படி இல்லை
நான் உங்களிடம் கொடுத்த இலங்கை இப்படி இல்லை. நான் ஒரு பெரிய போரை முடித்துவிட்டு உங்களிடம் இலங்கையை கொடுத்தேன். நான் உங்களிடம் கொடுத்த இலங்கை மிகவும் அமைதியான இலங்கை. அப்போது இலங்கைக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை.

சரத் பொன்சேகா
ஆனால் இப்போதே மார்ஷல் சரத் பொன்சேகா கூட சரியாக அவரது பணியை செய்ய முடியவில்லை. சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் மொத்த ராணுவமும் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு துறையில் முழு சுதந்திரம் அளித்திருந்தால் இப்படி தாக்குதல் நடந்திருக்காது என்று ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications