’வெளியே போ ரணில்’..! மகிந்தாவைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக கிளம்பிய மக்கள்! என்ன காரணம் தெரியுமா!
கொழும்பு : இலங்கையின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில், ரணில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று கூறி அவருக்கு ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
சுமார் 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்ட போர் உள்ளிட்ட நெருக்கடியை விட தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை மிகக் கடுமையான சூழ்நிலையில் எதிர்கொண்டுள்ளது.
இலங்கை நெருக்கடி
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் பரவலின் போது சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட மீதான தடையால் ஏற்பட்ட கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையே இலங்கை நெருக்கடிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் மிகக் கடுமையாக பண வீக்கம் ஏற்பட்ட நிலையில், உணவு, எரிபொருள், மருந்துகள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. இதனையடுத்து மக்கள் போரட்டம் வெடித்த நிலையில், கலவரம் மூண்டது.
ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்ப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களை ஏவி அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதனை அடுத்து திங்கட்கிழமை மகிந்த பதவி விலகினார். பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்குப் பின்னர் நாட்டில் நிலையான அரசாங்கம் இல்லாததால், 73 வயதான ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான ரணில் இலங்கையின் 26 வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்று இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில், ரணில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என்று கூறி அவருக்கு ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு எதிரே 'ரணில் கோ ஹோம்' என்ற புதிய போராட்ட தளத்தை அமைத்துள்ளனர். புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜபக்ச குடும்பத்தின் நல்ல நண்பர் என்பதால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறியதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சி ஆதரவு
இலங்கையின் தற்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சரும், எஸ்எல்பிபி கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.சந்திரசேன, "ரணிலுடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அவர் இந்த நாட்டை பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மீட்க சர்வதேச ஆதரவுடன் முயற்சி எடுப்பார் என கூறியுள்ளார்.