ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சம்.. பிரட் பாக்கெட் ரூ 200.. இலங்கை மக்கள் கடும் அவதி
கொழும்பு: இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலகில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இது இலங்கையில் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை மக்கள் அவதியில் உள்ளார்கள்.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரேடியாக ரூ 77 அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 55 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் பேருந்து கட்டணம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.

வறுமை
இதனால் பெரும்பாலான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்கா டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 260 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடனான போருக்கு பின்னர் இலங்கையின் பொருளாதாரம் நசிந்து போய்விட்டது.

கொரோனா ஊரடங்கு
பொதுவாக இலங்கை சுற்றுலா தளம் என்பதால் அங்கு முக்கிய வருமானமே சுற்றுலா பயணிகள் மூலமே கிடைக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டதால் நாளுக்கு நாள் மோசமான பொருளாதார நிலையை இலங்கை சந்தித்து வருகிறது.

7 மணி நேர மின்வெட்டு
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. சமையல் கேஸ், மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் ஏராளமான பேக்கரிகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் பிரட்டின் விலை ரூ 150 முதல் ரூ 200 வரை உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ 35 உயர்ந்துள்ளது.

சர்க்கரை விலை ரூ 215
ஒரு கிலோ பருப்பின் விலை ரூ 250 , சர்க்கரையின் விலை ரூ 215, உருளைக்கிழங்கின் விலை ரூ 300, பெரிய வெங்காயத்தின் விலை ரூ 400, உளுந்து கிலோ ரூ 2000 வரை உயர்ந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை
அதன்படி ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.39 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications