திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி
கொழும்பு: திருகோணமலையில் இந்தியா வசம் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை திரும்ப பெறமாட்டோம் என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் 2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏராளமான எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் உதயகம்மன் பில, சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா வசம் இருக்கும் இந்த எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை தங்கள் வசம் அரசு எடுத்துக் கொள்ளும் என கூறியிருந்தார். இது இந்தியா- இலங்கை உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
தற்போது உதயகம்மன்பில, இந்தியாவிடம் இருந்து எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை திரும்பப் பெறுவோம் என தாம் சொல்லவில்லை. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்துவோம் என்று மட்டுமே கூறியதாக விளக்கம் தந்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதருடன் பேச்சுவார்த்தை எதுவும் தாம் நடத்தவும் இல்லை என்றும் உதயகம்மன்பில கூறியுள்ளார். ஏற்கனவே கச்சத்தீவு அருகே மூன்று தீவுகளில் பிரமாண்ட காற்றாலை அமைக்கும் திட்டத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்திருக்கிறது. இது இந்தியாவை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications