"எஸ்கேப் பிளான்".. ரணிலை வைத்து சத்தமின்றி காய் நகர்த்தும் ராஜபக்சேக்கள்.. பிரதமரானது இதுக்குத்தானா?
கொழும்பு: இலங்கை பிரதமராக பதவி ஏற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்க அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே இருவரும் அரணாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நிலவி வந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இலங்கை.. பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க.. இன்று முக்கிய அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்க வாய்ப்பு?
பெரும்பான்மை
இந்த நிலையில் மே 17ம் தேதி ரணில் விக்ரமசிங்க தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவர் நியமன எம்பி. இவரின் ஐக்கிய தேசிய கட்சிக்கு வேறு எம்பிக்கள் இல்லை. இதனால் இவரை இலங்கை பொதுஜன முன்னணிதான் ஆதரிக்க வேண்டும். அது ராஜபக்சே கட்சியாகும். இந்த கட்சி கண்டிப்பாக ராஜபக்சேவை ஆதரிக்க உள்ளது. இது போக எதிர்க்கட்சியின் Samagi Jana Balawegaya கட்சியின் சில உறுப்பினர்கள் இந்த ரணிலை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.
வாய்ப்பு
இதனால் ரணில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் கடந்த சில நாட்களாக நடந்த போராட்டம், கலவரம் காரணமாக கோத்தபய ராஜபக்சே அதிபராக இருப்பதை மக்கள் விரும்பவில்லை. ரணில் ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவரையும் மக்கள் விரும்பவில்லை. இதனால் ரணிலை மற்ற எம்பிக்கள் ஆதரிப்பார்களா என்பது சந்தேகம்தான். ரணிலை ஆதரித்து மக்கள் வெறுப்பை சம்பாதிக்க எம்பிக்கள் விரும்புவார்களா என்பது சந்தேகம்தான்.
சிக்கல்
அங்கு மொத்தம் 225 எம்பிக்கள் உள்ள நிலையில், ரணிலுக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ரணில் பிரதமர் ஆனதும் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகியோரை காப்பாற்ற முயல்வார் என்று கூறப்படுகிறது. வேறு ஒருவர் பிரதமராக வந்தால் அவர் மஹிந்த ராஜபக்சே மீது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ரணில் பிரதமராக இருக்கும் பட்சத்தில் அவர் மகிந்தவிற்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த ஆக்சனும் எடுக்க வாய்ப்பு இல்லை.
ராஜபக்சே குடும்பம்
இன்னும் சொல்லப்போனால் அவர் மகிந்தவிற்கு சட்ட ரீதியான பாதுகாப்புகளை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. போராட்டம், கலவரம் பெரிதாகி பிரச்சனை கைமீறி செல்லும் சமயத்தில், மகிந்தவை நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றவும் ரணில் உதவியாக இருப்பார் என்றும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணிலை வைத்து காய் நகரத்து ராஜபக்சே குடும்பம் இதற்காக காய் நகர்த்தும் என்றும் கூறுகிறார்கள். ரணில் ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். 2015ல் ராஜபக்சே குடும்பம் ஆட்சியை இழந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அப்போது பிரதமர், அதிபராக ராஜபக்சே குடும்பம் இல்லை என்றாலும் ரணில்தான் ராஜபக்சே குடும்பத்தை மறைமுகமாக காத்தார். ரணில் ராஜபக்சேக்களின் அரசியல் அடியாள் என்றும் கூட சொல்லப்படுவது உண்டு. அதேபோல் இந்த முறையும் ரணில் ராஜபக்சே குடும்பத்தை காப்பார் என்று கூறப்படுகிறது. அங்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மே 17 தொடங்க உள்ளது. அன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
உதவி இருக்கிறார்
கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக வாக்குகள் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது போன்ற சமயங்களில் ராஜபக்சே குடும்பத்திற்கு ஆதரவாக பிரதமர் இருப்பதே நன்றாக இருக்கும். இதனால்தான் மற்றவர்களை விட்டுவிட்டு ஒரே ஒரு நியமன எம்பியான ரணிலை கோத்தபய ராஜபக்சே பிரதமராக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மகிந்த வெளிநாட்டிற்கு தப்பி செல்லும் பட்சத்தில் அதற்கு ஏற்ற உதவிகளை ரணில் செய்வார் என்றும் கூறப்படுகிறது.