இலங்கையில் நவ.14ல் நாடாளுமன்ற தேர்தல்! புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், நவ.14ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வந்தது. நெருக்கடியை தொடர்ந்து வெடித்த போராட்டம் காரணமாக, அதிபர், இலங்கையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த பின்னணியில்தான் கடந்த 21ம் தேதி இலங்கையின் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அது யாருக்கும் கிடைக்காததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. கடந்த 22ம் தேதி 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், இதில் அனுர குமார திசநாயகே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையொட்டி கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அனுர குமார செப்.23ல் இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார்.
ஏகேடி என அழைக்கப்படும் அனுர குமார திசநாயக்க கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு, இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நவ.14ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பட்டிருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் மூலம், தனது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக புதிய அதிபர் அநுர குமார திசாநாயக தெரிவித்திருந்தார். அதன்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் அநுர குமார திசாநாயக நேற்று (செப். 24) கையொப்பமிட்டார். மேலும் நவ.14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாகவும், நாடாளுமன்ற முதல் கூட்டம் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் 11 மாதங்கள் உள்ளன. இந்நிலையில், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications