இலங்கையில் இளைஞர்களின் புதிய அரசு.. ராஜபக்ஷேக்களுக்கு இடமில்லை; குறையும் அதிபர் அதிகாரம் -கோட்டாபய
கொழும்பு: இலங்கையில் ராஜபக்ஷேக்கள் இல்லாத இளைஞர்களை கொண்ட புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
சுட்டுத்தள்ள உத்தரவு.. மே 13 ஆம் தேதி வரை இலங்கையில் ஊரடங்கு நீட்டிப்பு - கொந்தளிப்பில் மக்கள்
தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
வன்முறை
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.
மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லறைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் எழுச்சியால் தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ஷே இலங்கை திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அரசு இடங்கள், ராஜபக்ஷேக்களின் சொத்துக்களுக்கு தீ வைத்து வருவதால் எரிபொருள் விநியோகத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இலங்கை பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் நேற்றிரவு தீவிர ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 13 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டு இருக்கிறது.
சுட்டுத்தள்ள ஆணை
அதே நேரம் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர் பொதுசொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நேற்று வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் ஆங்காங்கே சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை போலீசார் நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷேவின் திட்டம்
கடும் போராட்டங்கள், வன்முறைகளுக்கு மத்தியிலும் அதிபர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என விடாபிடியாக நிற்கும் கோட்டாபய ராஜபக்ஷே, சஜித் பிரேமதாசாவை பிரதமராக பதவியேற்க அழைப்பு விடுத்தும் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய கோட்டாயப ராஜபக்ஷே இலங்கையில் ராஜபக்ஷேக்கள் இல்லாத இளைஞர்களை கொண்ட புதிய அரசு அமையும் என்றார். அடுத்த வாரம் புதிய பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரவை தேர்வு செய்யப்படும் என ராஜபக்ஷே கூறியுள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம்
இந்த புதிய அரசாங்கத்தின் உதவியோடு அதிபரின் அதிகாரங்கள் தொடர்பாக அரசியலமைப்பில் 19 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றார். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அதிபரிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நாடு நிலையான தன்மைக்கு வந்த பிறகு அதிபர் முறை தொடர்பாக அனைத்து தரப்பு மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.