விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதல்?இலங்கை அரசு சொல்லும் விளக்கம் இதுதான்-எம்.பிக்கள் கடும் கண்டனம்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கையில் தாக்குதல் நடத்தக் கூடும் என வெளியான செய்திகள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய தகவல்கள், இலங்கையில் இயல்பு நிலையை சீர்குலைக்கக் கூடியவை என்று அந்நாட்டு தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்குகிற காலங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகின்றனர்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தப் போகிறது; தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தனிநாடு இயக்கத்தை நடத்தப் போகிறார்கள் என நடைமுறையில் இல்லாத கற்பனைகளை செய்திகளாக உளவு அமைப்புகள் ஊடகங்களில் உலவவிடுவது வழக்கம்.
இதேபோல் இந்த ஆண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக இந்திய உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதுவும் இலங்கையில் மிகவும் அசாதரணமான சூழ்நிலை நிலவும் நிலையில் இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டன. இலங்கையில் சிங்களரே இந்த முறை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் குறித்த இந்த செய்திகள் கவனம் பெற்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம், பட்டும் படாமல் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பேசுகிற இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள், இத்தகைய செய்திகள் விஷமத்தனமானவை. ஆதாரப்பூர்வமற்றவை என சாடுகின்றனர்.
Recommended Video
மேலும் இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர் மனோ கணேசன் தமது ட்விட்டர் பக்கத்தில், இத்தகைய செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. எந்த நாட்டு உளவுத்துறை இத்தகைய தகவல்களை கசியவிட்டன? இது தொடர்பாக உரிய விளக்கம் தரப்படவேண்டும் என கொந்தளித்திருக்கிறார். ஈழத் தமிழ் எம்.பி. சாணக்கியன் தமது ட்விட்டர் பக்கத்தில், வடகிழக்கு தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் தருணத்தில் இத்தகைய செய்திகள் வந்துள்ளன; இத்தகைய ஒன்றுகூடல்களைத் தடுக்கும் நோக்கத்தில்தான் இந்த செய்திகள் வெளியாகி இருக்கின்றன என்கிறார். இதேபோல் ஜேவிபி முன்னாள் எம்.பி. சிங்களரான பிமல் ரத்னநாயக்கவும் இச்செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.