இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் திராட்சை, ஆப்பிள் பழங்களுக்கு சிறப்பு வரி- கிடுகிடு விலை உயர்வு
கொழும்பு: இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுக்கு சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திராட்சை, ஆப்பிள் பழங்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் நாட்டின் மோசமான பொருளாதார பிரச்சனைக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு சமையல் எரிவாயு கொண்டு வந்த சரக்கு கப்பலுக்கு பணம் செலுத்த முடியவில்லை. இதனால் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் நிலவுகிறது.
இதனையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கோத்தபாய ராஜபக்சே, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளையும் அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு சிறப்பு பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி உள்ளிட்டவைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications