இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன இலங்கை ஊடகங்கள்.
Recommended Video
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. இலங்கை தேர்தலில் தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.
மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் வெளியேறிய சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவைதான் தேர்தலில் முக்கிய கட்சிகள். அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திர கட்சியும் மகிந்தவின் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கிறது.

மகிந்த ரணில் சஜித்
இலங்கையைப் பொறுத்தவரையில் சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இடையேதான் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டி இருந்தது. ஆனால் இம்முறை சுதந்திரக் கட்சி உடைந்த போதும் மகிந்த ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனவின் கீழ் ஓரணியாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்த பிளவுபட்ட சூழ்நிலையே மகிந்த ராஜபக்சேவின் வெற்றியை மிக எளிதாக அடையாளப்படுத்திவிடும்.

கூட்டணி விவரங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, மஹஜன எக்சத் பெரமுன, முற்போக்கு தமிழ் கட்சி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி, கருணாவின் டிவிஎம்பி என பல கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில், ஜாதிக ஹெல உறுமய, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ரணில் விக்ரமசிங்கேவின் ஐதேக தலைமையில் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் பகுதிகளில் நிலவரம்
தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் முன்பு பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் பிரதான போட்டியாளராக இருக்கும். இம்முறை அத்தனை தமிழ் கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் களத்தில் நிற்கின்றனர். இவை இல்லாமல் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழும் மலையக கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. மலையக தமிழ் கட்சிகள் ராஜபக்சே, சஜித், ரணில் ஆகிய மூவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்யும்.

இஸ்லாமியர் நிலை
ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அரசுக்கும் இஸ்லாமியர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருமுறையும் அரசை ஆதரித்த இஸ்லாமியர்கள் இம்முறை என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறார்கள்? என்பது எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இலங்கையில் சிங்களவரைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு மகிந்த ராஜபக்சேவையே முழுமையாக ஆதரிக்கின்றனர். ஆகையால் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராவதற்கே வாய்ப்புகள் என்கின்றன கொழும்பு தகவல்கள்.












Click it and Unblock the Notifications