இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்- வரலாற்றிலேயே முதல் முறையாக 39 பேர் போட்டி!
கொழும்பு: இலங்கையின் 12-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமான வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதனையடுத்து தலைநகர் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தேர்தலில் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு சங்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இலங்கையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.

இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேதிரனுக்கு சங்கு சின்னம்; முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு லாந்தர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொத்தம் 40 பேர் டெபாசிட் தொகை செலுத்தினர். ஆனால் 39 பேர்தான் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது அமைந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்த அனைவரது வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
1982-ம் ஆண்டுதான் முதல் முறையாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். 1988 தேர்தலில் 3 பேர்தான் களம் கண்டனர். 1994-ல் 6 பேரும், 1999-ல் 13 பேரும், 2005-ல் 13 பேரும், 2010-ல் 22 பேரும், 2015-ல்19 பேரும் ஜனாதிபதித் தேர்தலில் களம் கண்டனர். இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications