விறுவிறு இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாலை 4 மணி வரை தபால் ஓட்டுகள் பதிவு!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த தபால் ஓட்டுகள் பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். இலங்கையில் தபால் ஓட்டுகளைப் பதிவு செய்வதற்கு 7,12,321 அரசு ஊழியர்கள் தகுதியானவர்கள். இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறும் நிலையில் தபால் வாக்குகள் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் வரும் 21-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் உள்ளிட்ட 39 பேர் களம் காண்கின்றனர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிக அதிகமான வேட்பாளர்கள் முதல் முறையாக போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களைத் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் பிரசாரத்துக்குக் கூட எட்டிப்பார்க்கவில்லை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் உள்நாட்டு விவகாரமாக மட்டும் அல்லாமல் தெற்காசிய அரசியலிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனித்து திரைமறைவாகவும் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்டமாக இன்று தபால் மூலம் வாக்களிப்பு தொடங்கியது. இலங்கை அரசு பணியாளர்கள் மொத்தம் 7,12,319 பேர் தபால் வாக்குகளை செலுத்துகின்றனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய தபால் ஓட்டுகள் மாலை 4 மணி வரை பதிவாகும். இன்றைய நாளில் தபால் வாக்கு செலுத்தாதவர்கள் செப்டம்பர் 11,12 ஆகிய தேதிகளிலும் வாக்களிக்கலாம்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக மாவட்டங்களில் கொழும்பு- 27195, கம்பஹா- 52486, களுத்துறை- 37361, காலி- 41436, மாத்தறை-30882, ஹம்பாந்தோட்டை- 22167 பேர் விண்ணப்பித்திருந்ததாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழ் அரசு பணியாளர்கள் தபால் வாக்குகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்பி செல்வராஜா கஜேந்திரன் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையானது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதை போல உள்ளது. இலங்கையில் தமிழருக்கு அரசியல் பங்களிப்பு தரக் கூடிய கூட்டாட்சி இல்லாமல் ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கைகள் உள்ளன. இந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்த் தேசத்து அரசு பணியாளர்கள் தபால்மூல வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.













Click it and Unblock the Notifications