இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே போட்டி! பொதுஜன பெரமுன வேட்பாளராக அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிப தேர்தலுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நாமல் ராஜபக்சே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்சே பிரதமராக இருந்த போது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்தவர் நாமல் ராஜபக்சே.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது அடுத்த மாதம் 21-ந் தேதி (செப்டம்பர்) நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி பெறப்பட இருக்கிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டு பதவிகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டே தப்பி ஓடி பின்னர் திரும்பி வந்த "ராஜபக்சே" குடும்பத்தைச் சேர்ந்த நாமல் ராஜபக்சே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஈழத் தமிழரின் தனிநாடு போராட்டத்தை அழித்த போது ஜனாதிபதியாகவும் பின்னர் பிரதமராகவும் இருந்த மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே. ராஜபக்சே ஆட்சியில் இலங்கை அமைச்சராகவும் பதவி வகித்தார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் சகோதரர் மகன் நாமல் ராஜபக்சே.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஜனாதிபதிக்குதான் அதிகாரங்கள் உள்ளன. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அழைக்கின்றனர். இந்த நடைமுறை 1978-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த ஜேஆர் ஜெயவர்த்தனேதான் இதனை அமல்படுத்தினார். ஜேஆர் ஜெயவர்த்தனாவே இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அவருக்குப் பின்னர் பிரேமதாச, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தனர்.
2005-ம் ஆண்டு முதல் முறையாக மகிந்த ராஜபக்சே, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது பதவி காலத்தில்தான் ஈழத் தமிழரின் தனிநாடு ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டு பல லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு பிந்தைய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக வென்றார்.
2015-ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, 2019-ம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வென்றனர். கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் பதவி வகித்த போது, இலங்கை மிகப் பெரிய பொருளாதார பேரழிவைச் சந்தித்தது. இதனால் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. இதன் உச்சமாக முதலில் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையை விட்டு தப்பி ஓடினார். இதன் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இலங்கையை விட்டே ஓடிப் போனார். சிறிது காலத்துக்குப் பின்னர் இருவரும் இலங்கை திரும்பினர். இந்த மக்கள் புரட்சியின் விளைவாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தற்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இலங்கை தமிழர்களை அழித்த, இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய ராஜபக்சே குடும்பத்தின் அடுத்த வாரிசான நாமல் ராஜபக்சே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications