இலங்கை திருகோணமலையில் இந்தியாவுக்கு துரோகம்? அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க அனுமதியா?
இலங்கையின் திருகோணமலையில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்கிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கொழும்பு: இலங்கை திருகோணமலையில் இந்தியாவுக்கு துரோகம் செய்து அமெரிக்கா ராணுவம் தளம் அமைக்க அனுமதி வழங்கக் கூடும் என்கின்றன இலங்கை ஊடகங்கள். ஆனால் இலங்கையில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க அனுமதிக்கவில்லை என்கிறார் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி.
இலங்கையில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க வேண்டும் என்பது 1980களில் இருந்தே மேற்கொள்ளப்படுகிற முயற்சி. இதற்காக முதன் முதலில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வானொலிக்கான டவர் அமைக்க இலங்கையில் அமெரிக்கா முயற்சித்தது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் இலங்கையை மிக கடுமையாக எச்சரித்தார். இந்தியாவின் அனுமதி இல்லாமல் ஒரு அன்னிய நாடும் இலங்கையில் நுழைய முடியாது என கர்ஜித்தார். இதன் பின்னரே ஈழத் தமிழர் பிரச்சனையிலும் இந்திரா அம்மையார் அதிக அக்கறை காட்டினார்.

இலங்கையின் திருகோணமலை துறைமுகமானது மிகவும் முக்கியமான ஒன்று. சோழர்கள் காலத்தில் இருந்தே திருகோணமலை துறைமுகம் யார் வசமாக இருக்கிறதோ அவர்களே தென்கிழக்கு ஆசியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அரசியல் நியதி. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கான யுத்தங்கள் காலந்தோறும் நடந்திருக்கின்றன.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி ஆயுத யுத்தம் நடத்திய போதும் கூட, திருகோணமலையில் ஆங்கிலேயர் காலத்தில் கைவிடப்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை இந்தியா கையகப்படுத்தி அங்கே நிலை கொண்டிருந்தது. இன்னமும் திருகோணமலையில் இந்தியா முகாமிட்டுதான் இருக்கிறது.
ஆனால் அண்மைக்காலமாக திருகோணமலையில் அமெரிக்கா மிகப் பெரிய ராணுவ தளம் அமைக்க முயற்சிப்பதாக இலங்கை ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக இலங்கைக்கு அமெரிக்காவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு குழுக்களை அனுப்பி வருகிறது. இதனால் இலங்கை ஊடகங்கள் எழுப்பிய அச்சம் உறுதிப்படுத்தப்பட்டும் வருகிறது.
இதனை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கடுமையாக நிராகரித்திருக்கிறார். அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க, அந்த இயக்கத்தின் 9 ஆயுத கப்பல் குறித்த புலனாய்வு தகவல்களை தந்தது அமெரிக்காதான் என விசுவாசத்தையும் காட்டியிருக்கிறார் அலி சப்ரி. மேலும் இலங்கை தனியாக வாழக் கூடிய ஒருநாடும் அல்ல. சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் ஏதோ ஒன்றை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் அலி சப்ரி என்கின்றனர் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
இலங்கையின் வடக்கு கிழக்கு என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த இரண்டு நிலமும் தமிழர் தாயகப் பிரதேசம். இதில் கிழக்கு மாகாணத்தில்தான் திருகோணமலை உள்ளது. வடக்கு மாகாணத்தில் சீனா நிலை கொள்வதற்கு முயற்சிக்கிறது. கிழக்கில் அமெரிக்கா வேற லெவலில் காலூன்ற முயற்சிக்கிறது. இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு பெரும் சவால் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications