இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே
கொழும்பு: இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது; இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகாலத்துக்கு கொடுத்தது தவறான நடவடிக்கை என புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபராக பதவியேற்ற பின்னர் டிவி சேனலுக்கு முதன் முறையாக பேட்டி அளித்த கோத்தபாய ராஜபக்சே கூறியதாவது:

இந்தியாவுடன் நட்புணர்வுடன் இணைந்தே இலங்கை செயல்படும். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது. இலங்கை ஒருநடுநிலை நாடாகவே இருக்கும்.
இந்தியா, சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளுமே இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். இலங்கையில் முதலீடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் அனைத்து நாடுகளைப் போல சமமானதாக இருக்கும்.
முந்தைய ஆட்சிக் காலங்களில் அம்பந்தோட்டாவை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்தது ஒரு தவறான நடவடிக்கை என்பதை ஒப்புக் கொள்கிறேன். தமிழ், சிங்கள மக்களுக்கு தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை முட்டாளாக்குகின்றனர். வளர்ச்சி என்கிற செயல்பாட்டின் மூலம் நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். நான் எந்த ஒரு இனத்துக்கும் எதிரானவன் அல்ல.
பாதுகாப்புச் செயலராக இருந்த போது கட்டுப்பாடுகளுடன் பணியாற்றியதால் நான் கடும்போக்காளனாக சித்தரிக்கப்படுகிறேன். ஆனால் அப்படியான கற்பிதங்கள் பொய் என்பதை மக்கள் விரைவில் உணருவார்கள். இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications