செப்.21-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.. இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு! மீறினால் அபராதம்+ சிறை!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்களை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் பிரதமரை விட ஜனாதிபதிக்குதான் அதிக அதிகாரம். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரி அனுர குமார திசநாயக்க, தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். வரும் 21-ந் தேதி இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக தபால் வாக்குகள் செலுத்தப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டால் ரூ50,000 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அனைத்துவிதமாக ஊடகங்களின் ஊடாக வேட்பாளர்கள் விளம்பரங்களை வெளியிடக் கூடாது எனவும் இலங்கை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் கொழும்பு, நுகேகொடை, பிலியந்தலை ஆகிய பகுதிகளில் முக்கிய வேட்பாளர்களின் இறுதி பிரசார பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியிலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மருதானை- டவர் மண்டபம் அருகேயும் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொள்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இறுதி கட்ட பிரசாரம் நுகேகொடையிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சேவின் இறுதி கட்ட பிரசாரம் பிலியந்தலையிலும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications