சீமான் ஆமைக்கறி விவகாரம்.. இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக கிண்டலடித்த தமிழ் எம்.பி.
கொழும்பு: தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் ஆமைக்கறி விவகாரத்தை முன்வைத்து இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி. ஒருவர் பகிரங்கமாக கிண்டலடித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமையன்று வரவு செலவுத் திட்ட 2-ம் வாசிப்பு மீதான 4-வது நாள் விவாதம் நடைபெற்றது. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. கு. திலீபன் பேசியதாவது:
கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்
சீமான் ஆமைக்கறி
தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்று தமிழினத்தை வைத்து ஆமைக்கறி, பூனைக்கறி கதை சொல்லி தமிழ் மக்களை வைத்து , தமிழ் மக்களின் துன்பத்தை வைத்து பிழைப்பு நடத்துவது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.சுமந்திரன் உருவெடுத்திருக்கிறார். இலங்கையின் சீமான் அதாவது தமிழர்களின் சீமான் என்றுதான் சுமந்திரன் எம்.பி.யை சொல்ல வேண்டும்.
சுமந்திரன் பித்தலாட்டம்
விளைந்த நெல் வயலுக்குள் மாட்டை இறக்கி உழ வைக்கிறார் சுமந்திரன். பொங்கல் பொங்கும் போது பானையில் சுற்றி கட்டப்படும் மாவிலி கருகி இருக்கும். ஆனால் சுமந்திரன் எம்.பி. பொங்கிய பொங்கல் பானையில் உள்ள மாவிலை மட்டும் குளிர்மையாக இருக்கிறது. எதற்காக இந்த பித்தலாட்டம்?
பிணங்கள் நகை திருட்டு
வன்னியில் இறந்த பிணங்களில் உள்ள நகைகளை களவெடுத்துக் கொண்டு வந்தவர்தான் இந்த எம்.பி. சுமந்திரன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருக்க தகுதியில்லாத மனிதன். செஞ்சோலையை புலிகளின் பயிற்சி பட்டறை என்று காட்டிக் கொடுத்து கொன்றவர் ஶ்ரீதரன் எம்.பி. மற்றொருவர் முஹம்மது சாணக்கியன். மன்னிக்கவும் ராசமாணிக்கம் சாணக்கியம். உங்களுக்கு வழங்கப்பட்ட அரச சலுகைகள் நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் உயர்தர உணவு, உங்கள் சம்பளத்தை நிறுத்திவிட்டு ஓய்வூதியம் பற்றி பேசலாம். இவ்வாறு கு.திலீபன் எம்.பி. பேசினார். அவரது இந்த பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் உக்கிரமாக நடைபெற்றது. (Source: இலங்கை தமிழ் ஊடகங்கள்)
யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?
தமிழகத்தில் ஈழ விடுதலைக் குழுக்கள் செயல்பட்ட போது டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவும் இங்கே இருந்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குழு. 1986-ல் சென்னையில் டக்ளஸ் தேவானந்த தங்கியிருந்த போது பொதுமக்கள் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலின் போது டக்ளஸ் குழுவை சேர்ந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் திருநாவுக்கரசு என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தவர் டக்ள்ஸ் தேவானந்தா. அவரது கட்சியைச் சேர்ந்த திலீபன் என்பவர்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் சீமான் ஆமைக்கறி விவகாரம் குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.