விஸ்வரூபம் எடுக்கும் போர்க்குற்றம்- ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை!
Recommended Video
கொழும்பு: இலங்கை ராணுவத்தின் மீதான ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகளில் இருந்து இலங்கையை நீக்க அதிரடி முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐநா அமைதிப்படையானது பல்வேறு நாடுகளில் அமைதி ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இலங்கை ராணுவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை ராணுவ வீரர்கள் பலர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கை ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர்தான் 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரம் தமிழர்களை படுகொலை செய்தது. அதனால் சவேந்திர சில்வா எனும் போர்க்குற்றவாளியை ராணுவ தளபதியாக நியமிக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையமும் ஏற்கனவே இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தது. இருப்பினும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் இருந்து இலங்கையை அதிரடியாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான்ஹக் தெரிவித்துள்ளார்.. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications