இந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ!
கொழும்பு: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த மாதம் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு வருகை தர உள்ளதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழு இலங்கைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்தது.
இலங்கையில் சீன தூதுக்குழு, அதிபர், பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நெருக்கம் காட்டும் சீனா
இந்தியாவின் அண்டை நாடானா இலங்கையில் சீனா அதீதமாக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. அந்த நாட்டுக்கு வேண்டிய உதவிகளை செய்து தன் பக்கம் ஈர்க்கும் முயற்சி செய்து வருகிறது. இதேபோல் மாலத்தீவுடனும் சீனா மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது. மாலத்தீவில் ஏராளமான முதலீடுகளை செய்து கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல வங்கதேசத்துடன் உறவுகளை புதுப்பித்து வருகிறது. சீனாவின் இந்த செயல் இந்தியாவிற்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
அதிரச்சியில் அமெரிக்கா
ராஜாங்க ரீதியாக உதவி பல்வேறு நாடுகளை தன் பக்கம் ஈர்க்க சீனா செய்யும் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சீனா ஆதிக்கம் செலுத்த விரும்பும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அந்த வகையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இலங்கையுடன் அமெரிக்கா பேசப் போகிறது.
பாம்பியோ வருகிறார்
அக்டோபர் 28ம் தேதி இலங்கை செல்லும் மைக் பாம்பியோ, தலைநகர் கொழும்புவில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார், ஆனால் எந்த விவரமும் தரவில்லை,
விரைவில் அறிவிப்பு
இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை நன்கு அறிந்தவர்கள் இதுபற்றி கூறுகையில், இலங்கைக்கு வரும் முன்பு மாலத்தீவின் தலைநகரான மாலேவில் பாம்பே தங்கியிருந்து நீண்ட் பேச்சுவார்ததை நடத்தலாம் என்கிறார்கள்.இதனிடையே பாம்பியோவின் "வருகை திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று மாலத்தீவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விரைவில் அறிவிப்பு
இதனிடையே இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பருடன் இந்த மாதம் டெல்லிக்கு வர உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்த சந்திப்பின் போது இந்தியா அமெரிக்கா இடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்