கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் நுழையும் முன் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு- ஷாக் வீடியோ
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நேற்று நுழைவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவம் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையின் மிக மோசமான பொருளாதார பேரழிவு அந்நாட்டு அரசியலையும் நிலைகுலைய வைத்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை விரட்டியடித்த போராட்டக்காரர்கள், மகிந்தவின் ஆதரவாளர்கள் வீடுகள், நிறுவனங்களை எரித்து சாம்பலாக்கினர்.

இந்த பதற்றத்துக்கு இடையே பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே ஒரு நியமன எம்.பி.தான் ரணில். ஆனாலும் சர்வதேசத்துடன் நல்ல்லுறவு கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவால் இலங்கையை சீரமைக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்கேவால் எதனையும் செய்யவும் முடியவில்லை.
இதனால் பொதுமக்களின் கொந்தளிப்பும் கோபமும் எரிமலையாக வெடித்தது. இதன் உச்சகட்டமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். அதற்கு முன்னரே ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார். பத்ரமுல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் பாதுகாப்பில் கோத்தபாய பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு தரப்பு தகவல்களோ கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டே தப்பி ஓடிப் போய்விட்டார் என்கின்றன.
இதனிடையே பொதுமக்கள், ஜனாதிபதி கோத்தபாயவின் அதிகாரப்பூர்வ மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னதாக அங்கு ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டது. பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய தொடங்கிய போது அவர்களை நோக்கி சரமாரியாக கண்மூடித்தனமாக சிங்கள ராணுவம் சுட்டது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இருந்தபோதும் பொதுமக்களின் ஆவேசத்தை கண்டு அதிர்ந்து போன இலங்கை ராணுவம், ஒருகட்டத்தில் ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறியும்விட்டது. இது தொடர்பான வீடியோக்களும் இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications