இருளர் சமூக மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சிங்கப்பூர் தம்பதி.. சபாஷ் போடுவோம் இவர்களுக்கு!
அரசு பள்ளியின் ஆண்டு விழாவில் சிங்கப்பூர் தம்பதி பங்கேற்றனர்
கடலூர்: பாத்ரூம்களை கழுவுவது, மது பாட்டில்களை பொறுக்கி விற்பது.. இதுதான் இருளர் பழங்குடியின மக்களின் இன்றைய நிலைமை! ஆனால் தாங்கள் பட்ட கஷ்டம் தங்கள் பிள்ளைகளும் பட்டுவிடக்கூடாது என்பதற்காக வறுமையிலும் படிக்க வைத்து வருகின்றனர் பரங்கிப்பேட்டை இருளர் சமுதாயத்தினர்!
ஆரம்ப காலத்தில், எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது.. இதுதான் இருளர்களின் பிழைப்பாக இருந்தது. இப்போதும் அவர்களின் பெரிய அளவுக்கு மாறவே இல்லை.
ஆனால் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் அடிமனசில் தோன்றியுள்ளது. அதற்காகத்தான், கழிவறை சுகாதாரப்பணி, மதுப்பாட்டில்கள் பொறுக்கி விற்றல் என பல வேலைகளை செய்து படிக்க வைத்து வருகின்றனர்.

இருளர்
அப்படி ஒரு பள்ளிதான் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், எம்ஜிஆர்.நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்தான்.

சிறப்பு
ஆரம்ப காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று ஊர் கல்வி திருவிழாவாகவே வருஷந்தோறும் கொண்டாடப்படுவதே இதன் சிறப்பு எனலாம். முதன்முதலில் 42 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியானது, இன்று 8 ஆசிரியர்கள், 180 மாணவர்கள் படித்து வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஊர்வலம்
இன்றுகூட அந்த பள்ளியின் 14-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது ஊர்மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ரூ.1.50 லட்சம்
மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர் இணையர் கோபாலகிருஷ்ணன், வசந்தகுமாரி ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆடைகள், விளையாட்டு பொருட்களை வாங்கி தந்து அசத்தி விட்டார்கள்!












Click it and Unblock the Notifications