தலையில் ஈட்டி பாய்ந்ததில் பள்ளி மாணவன் மூளைச்சாவு.. பயிற்சியின் போது விபரீதம்.. கடலூரில் அதிர்ச்சி
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில், ஈட்டி எறிதல் பயிற்சியின் போது பள்ளி மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்ததன் காரணமாகவே மாணவனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற 15 வயது மாணவன் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 24 ஆம் தேதி வழக்கம்போல் மாணவன் கிஷோர் பள்ளிக்கு சென்றிருந்தார். பள்ளி முடிந்ததும் மாலையில் சிறிது நேரம் விளையாட்டு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மாணவன் கிஷோர் சிலம்பம் பயிற்சியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவன் கிஷோர் மாலையில் வட்டு எறியும் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். இதே விளையாட்டு மைதானத்தில் மற்றொரு இடத்தில் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்து வந்தது. அப்போது மாணவன் கிஷோர் தான் வீசிய வட்டை எடுப்பதற்காக சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் மற்றொரு மாணவர் ஈட்டி எறிந்துள்ளார்.
அந்த ஈட்டி சரியாக மாணவன் கிஷோரின் தலையின் மீது பாய்ந்தது. தலையில் ஈட்டி பாய்ந்ததில் ரத்தம் பீறிட்டு வழிந்தது. இதையடுத்து மாணவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கும் மாணவன் கிஷோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு மாணவன் மூளைச்சாவு அடைந்தான். இதை கேள்விப்பட்டதும் மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதனர். மாணவனின் இந்த நிலைமைக்கு தனியார் பள்ளி நிர்வாகமே காரணம் என பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் தனியார் பள்ளி மீது புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பள்ளியில் சிறிய விளையாட்டு மைதானமே இருந்த போதிலும், இந்த சிறிய மைதானத்தில் ஒரே நேரத்தில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்ததன் காரணமாகவே மாணவனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தலையில் ஈட்டி பாய்ந்து பள்ளி மாணவன் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications